ரிசர்வ் வங்கி தனது கையிருப்பிலிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை அரசாங்கத்துக்கு அளிப்பதாக அறிவித்திருக்கிறது. இது பொருளாதார அறிஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது 3.6 லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து அரசாங்கத்துக்குக் கொடுக்குமாறு மோடி அரசு கடும் நெருக்கடி தந்தது. ‘அப்படிச் செய்தால் ரிசர்வ் வங்கியின் தற்போதைய AAA என்ற ‘ரேட்டிங்’ குறைந்துவிடும். அதனால் இந்தியா பெறும் கடன்களின் மதிப்பு அதிகமாகி சுமை ஏறிவிடும் என்று வெளிப்படையாக மறுத்துவிட்டார். தொடர்ந்து பாஜகவின் கடும் நெருக்கடியையடுத்து தனிப்பட்ட காரணங்கள் என்று கூறி ரகுராம்ராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதே நெருக்கடியின் காரணமாகவே ரகுராம் ராஜனுக்கு அடுத்து வந்த உர்ஜித் படேலும் தனிப்பட்ட காரணம் என்று கூறி தனது ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
பொருளாதார நிபுணர்கள் ரிசர்வ் வங்கி கவர்னர்களாக இருப்பதால் விரும்பியவாறு ரிசர்வ் வங்கியின் தொகையை சூறையாட முடியவில்லை என்று பாஜக கருதியது. இதையடுத்து பாஜக அரசு பொருளாதாரக் கல்விப் பின்புலம் இல்லாத சக்திகாந்ததாஸை ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை ரிசர்வ் வங்கியின் போர்டு உறுப்பினர்களாகவும் நியமித்தது.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் பற்றாக்குறையை சரிசெய்ய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றுக்கொண்டிருக்கிறது இது மட்டும் இல்லாமல் தற்போது ரிசர்வ் வங்கியிடம் உபரியாக இருக்கும் 1.76 லட்சம் கோடி பணத்தை சூறையாட உள்ளது.
இதன்படி 2018-19 ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் உபரி ரூ123414 கோடி திருத்தப்பட்ட பொருளாதார முதலீட்டு கட்டமைப்பின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள உபரி ரூ52637 கோடி என மொத்தமாக 1.76 லட்சம் கோடி உபரித்தொகை மத்திய அரசுக்கு வழங்கப்பட உள்ளதாக ரிசர்வ்வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு ( demonetisation) நடவடிக்கைமூலம் நாட்டின் பொருளாதாரத்தை மந்தநிலைக்குக் ( slowdown ) கொண்டுவந்து நிறுத்தியுள்ள பாஜக அரசு ரிசர்வ் வங்கியை சூறையாடுவதன்மூலம் நாட்டை திவால் நிலையை நோக்கித் தள்ளுகிறது.